புதுடெல்லி: இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார் இந்தியாவின் அதிரடி துவக்க வீரரும் துணைக் கேப்டனுமான ‍ரோகித் ஷர்மா.

இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நியூசிலாந்து அணியுடனான 5வது மற்றும் இறுதி டி-20 போட்டியின்போது, அணிக்கு தலைமையேற்ற ரோகித் ஷர்மா, பேட்டிங் செய்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது, இடதுகால் பின்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், ‘ரிடையர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். அப்போட்டியில், அவர் ஃபீல்டிங் செய்யவுமில்லை.

இந்நிலையில், அந்தக் காயம் விரைவில் குணமாகாது என்று தெரிவிக்கப்படுவதால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் ஷர்மா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.