சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால் சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
புவி வெப்பமாதல் கரியமில வாயு உமிழ்வு உள்பட பல்வேறு காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2100ல் தமிழ்நாட்டின் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடல்நீர் மட்டம் எவ்வளவு உயரும் வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்து வரும், சென்னை அண்ணா பல்கலையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பனி பாறைகள் உருகுவது, புவி வெப்பமாதல் காரணமாக கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
கடல் மட்டம் உயர்வு குறித்து கடந்த 1991ம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தவர், அப்போது இருந்த கடல் மட்ட உயரத்தை அடிப்படையாக வைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆய்வின்போது, பகுதி வாரியாக திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நமது நாட்டில் கடல் மட்டும் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
அதாவது, நம் நாட்டில் ஆண்டுக்கு, 3.4 மி.மீ., அளவுக்கு கடல் மட்ட உயர்வு இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக, நாடு முழுதும் ஒன்பது மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில், 69 மாவட்டங்களில் கடல் மட்ட உயர்வு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, 1991 – 2023 வரை கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்ற விபரங்கள், செயற்கைக்கோள் வாயிலாக திரட்டப்பட்டன.
இத்துடன், 1991 – 2023 வரையிலான காலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிபரங்கள் அடிப்படையிலும் கடல் மட்ட உயர்வு விகிதங்கள் மதிப்பிடப்பட்டு உள்ளன. அந்த ஆய்வுகளின்படி, ஆண்டுக்கு 3.4 மி.மீ., என்று கணக்கிட்டால், 2100ம் ஆண்டில், 25 செ.மீ., அளவுக்கு தான் கடல் மட்ட உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுதும் கடல் மட்டம் உயரும் வாய்ப்புள்ள 69 மாவட்டங்கள் குறித்த தர வரிசை பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த 14 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கரியமில வாயு உமிழ்வு படிப்படியாக அதிகரித்தால், வெப்பநிலை அதிகரித்து, அதன் காரணமாக கடல் மட்ட உயர்வு அதிகபட்சமாக, 2100ம் ஆண்டில் 110 செ.மீ., வரை செல்ல வாய்ப்புள்ளது. இதனால் தமிழத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், ஆந்திராவில் நெல்லுார், மேற்கு வங்கத்தில் சுந்தர்பன், கேரளாவில் திருச்சூர், மஹாராஷ்டிராவில் ராய்காட், குஜராத் மாநிலம் கட்ச் ஆகிய நகரங்கள், கடல் மட்ட உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது தெரிய வருகிறது.
தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலுார், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களில், கடல் மட்ட உயர்வால் பருவ மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படும். இதில் கடல் நீர் ஊருக்குள் வருவதை விட, நிலப் பகுதியில் இருந்து வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படும். இதனால், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
சென்னையில் கூவம், அடையாறு முகத்துவார பகுதிகள், முட்டுக்காடு, பழவேற்காடு ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் கடல் மட்ட உயர்வின் தாக்கம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கரியமில வாயு உமிழ்வு அதிகரிப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களின் அர்ப்பணிப்புடன், அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தள்ளார்.