டில்லி

டில்லியில் விமான போக்குவரத்தில் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது .

டில்லியில் ‘ஜி20’ உச்சி மாநாடு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி டில்லியில் போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகள் விமான போக்குவரத்திலும் எதிரொலித்து உள்ளது.

இந்த மாநாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வர இருப்பதால் விமான நிலையத்தில் விமான பார்க்கிங் வசதி போதுமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி இருப்பதன் பேரில் சுமார் 250 விமானங்கள் ரத்து ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 80 புறப்பாடு மற்றும் 80 வருகைக்கான விமானங்களை ரத்து செய்ய இருப்பதாக டில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு விமான நிறுவனங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளன. விமான நிலையத்தில் போதிய அளவு பார்க்கிங் இடம் இருப்பதாக விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும் விமானங்களுக்கான கட்டுப்பாடு குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.