ராமேஸ்வரம்

ன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கோவிலில் இரவு 9 மணி வரை நடை திறந்து வைக்கப்பட உள்ளது.

கடந்த 29 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்.

இன்றிரவு 8 மணிக்கு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பிறகுதான் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை ஆடி திருக்கல்யாண திருவிழாவில் 8 ஆம் திருநாள் மாலை 4 மணிக்கு மேல் கோவிலில் இருந்து அம்பாள், தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடி மேலத்தெரு மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணியில் இருந்து இரவு வரையிலும் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு, பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், தீர்த்தமாடவும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று மஞ்சல் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுவதால் மாலை 5 மணியில் இருந்து மாலை 7 மணிவரை கோவில் நடை சாத்தப்படும். ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால் அதிகாலை 2:00 மணிக்கு நடை திறந்து 2:30 மணிமுதல் 3:00 மணிவரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்று 6:00 மணிக்கு கெந்தமாதன பர்வதம் செல்லும்போது நடை சாத்தப்பட்டு இரவு 10:00 மணிவரை நடை சாத்தப்படும் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.