சென்னை

ராமநாதபுரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா திமுகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.

திமுக வில் தற்போது அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் இணைவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அமமுக வில்  இருந்து தங்கத் தமிழ் செல்வன் மற்றும் கலைராஜன் திமுகவில் இணைந்தனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் தலைமையில் உருவான அமமுகவில் இணைந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களைப் போல் அமமுகவை சேர்ந்த மணமேல்குடி ஒன்றிய செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் இன்று  திமுகவில் அக்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளார் அவர் திமுகவின் தலைமை தமக்குப் பிடித்துள்ளதால் எவ்வித நிபந்தனையும் இன்றி முழு மனதுடன் திமுகவில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது ராமநாதபுரம் அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் நாளை திமுகவில்  இணைவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்துள்ளன. இது குறித்து இருதரப்பிலும் இந்த தகவல் உறுதி செய்யப்படாமல் உள்ளது.