குஜராத்:

குஜராத்தில் நடைபெறும் 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் வாக்குபதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அகமது படேல் வெற்றிபெறுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரகிறது. இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, பாரதியஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, பல்வந்த்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் அகமது பட்டேல் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

3 பேர் மட்டுமே தேர்வாக முடியும் என்ற  நிலையில் 4 பேர் போட்டியிடுவதால் குஜராத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

ராஜ்யசபா தேர்தலில் காங்., வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற 44 எம்எல்ஏக்கள் தேவை. தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அகமது பட்டேலுக்கு வாக்களித்தால், அகமது படேல் வெற்றிபெறுவது உறுதியாகிவிடும்.

ஆனால், அகமது படேலை வெற்றியை பறிக்க பாரதியஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாரதியஜனதா கட்சியினர் விலைகொடுத்து வாங்கி வருகின்றனர்.  இதன் காரணமாக இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதியஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதன் காரணமாக, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூர் அழைத்துச்சென்று தங்க வைத்து, நேற்று அகமதாபாத் திரும்ப அழைத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று  குஜராத் மாநில முதல்வர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,  பாரதியஜனதா சார்பில் போட்டியில் உள்ள 3 பேரும்  வெற்றிபெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அவரின் திட்டவட்டமான அறிவிப்பு காரணமாக, குஜராத்தில் மறைமுகமான குதிரை பேரத்தில் பாரதியஜனதா ஈடுபட்டு வருவது மீண்டும் உறுதியானது.

இந்நிலையில், இன்று நடைபெறும் தேர்தலில் பாரதியஜனதாவினர் 3 பேரும் வெற்றிபெற்றால், குதிரை பேரம் நடந்தது  உண்மை என்பது பட்டவர்த்தனமாக உறுதியாகிவிடும்.

பொறுத்திருந்து பார்ப்போம்…