சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணிக்கு 4 இடங்களுக்கும், அதிமுக கூட்டணிக்கு இரு இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய நபராக கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல திமுக கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணியில் மநீம சேர்ந்தபோது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கமல்ஹாசன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.
இதுதொடர்பாக மநீம வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக அணியில் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகிறார் என தெரிவித்துள்ளது.