சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வங்கக்கடலின் மேல் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இரு நாட்கள் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறிய நிலையில், நேற்று முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், இனறும், நாளையும் சென்னை உள்பட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல அலை நிகழ்வு தற்போது நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று(ஜன.24) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (25-ம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 26-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
ஜனவரி 27 முதல் 29-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]