தூத்துக்குடி: இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி என முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கண்டு பயப்படுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்கள் குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமனறத்தில் அவரது பேச்சுக்கு  பாஜக உள்பட பலர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.  இண்டி கூட்டணியைச்சேர்ந்த பல எம்.பி.க்களே ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தாக கூறப்படுகிறது.  இதையடுத்து, ராகுல்காந்தியின்  தராதரமற்ற பேச்சு அவைக்குறிப்பில் இருந்து அகற்றப்பட்டது.

ராகுலின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுல் தனது பெயருக்கு பின்னால் காந்தி என்ற வார்த்தையை போட அருகதை அற்றவர் என்றும், மகாத்மா காந்தி சாகும்போது கூட ஜெய் ஸ்ரீராம் என்று கூறிக்கொண்டுதான் தரையில் சாய்ந்தார். ஆனால், இவரோ இந்துக்களை இழிவாக விமர்சித்து உள்ளார். அவர் இனிமேல் ராகுல் என போட்டுக்கொள்ளட்டும், அல்லது ராகுல் ராஜீவ் என்றோ, ராகுல் சோனியா என்றோ போட்டுக் கொள்ளட்டும் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் பலர்,   80 சதவிகிதம் வாழும் இந்துக்கள் வாழும் இந்திய திருநாட்டில், இந்து மதம் மற்றும் அதை பின்பற்றுவோர்  குறித்த அவரது கண்ணோட்டம் தவறானது என்று  சமூக வலைதளங்களில் கண்டிக்கப்பட்டு வருகிறது. மேலும்,சிலர், ராகுல்,  தனக்கு சில கட்சிகளின் ஆதரவு இருப்பதால், தன்னை யாரும் ஏதும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசி பேசியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இதுபோன்ற விமர்சனங்களை திமுகவினர் செய்து வரும் நிலையில்,  அவர்களை பின்பற்றி ராகுல் பேசி வருவதாகவும்  விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே சீக்கியர் விவகாரத்தில் அவரது பாட்டியும், இலங்கை தமிழர்கள் விவகாரத்தால், அவரது தந்தையும் சிதைந்துபோன நிலையில், இவருக்கும் அதுபோன்ற ஒரு நிலையே ஏற்படும் என்றும் எச்சரிக்கைகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுலுக்கு அக்கட்சி வழங்கி, கொஞ்சம் உயிரோடு துடித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி இனி முழுமையாக மரணத்தை தழுவ ராகுலே மட்டுமே போதும்  என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த   தமிழிசை சவுந்தரராஜன்,  தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவி இருக்கும். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று ஒட்டு மொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார், இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.

பாராளுமன்றத்திற்கு என்று ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆனால் ராகுல் காந்தி சிவன் படத்தை காண்பித்து வருகின்றார். 3 அமைச்சர்கள் எழுந்து இதற்கு பதில் சொன்னார்கள். ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை தவறாக சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள்.

இன்னுயிரை நாட்டிற்காக ஈன்றவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்று ராகுல் சொன்னார். உடனடியாக ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

விவசாயிகளுக்கு பயிர்களுக்கு விலை நிர்ணயம் இல்லை என்று தவறான கருத்தை சொன்னார். அதற்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டி இருந்தது.

பாராளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ஏதோ விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்று ராகுல் பேசுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 எம்.பி.க்கள் உள்ளனர். ராகுல் காந்தி இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு பேசினாலும் 40 எம்.பி.க்கள் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தது வேதனை அளிக்கக் கூடியது. இவர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இருக்காது. சத்தம் போடுவார்கள் அவ்வளவு தான்.

இன்று ஒரு வேதனையான நிலையை பாராளுமன்றத்தில் நாம்  பார்த்து இருக்கின்றோம். இதனை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் பிரதமர் தயாராக இருப்பார் என்பது எனது கருத்து என்றார்.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை,  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.  இதற்கு காரணமானவர்கள் திமுகவினர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவ்வளவு பெரிய உயிரழப்பு ஏற்பட்டுள்ள கள்ளக்குறிச்சிக்கு, முதலமைச்சரோ, துறை சார்ந்த அமைச்சர்கள் அங்கு போய் பார்க்கவில்லை என்று கூறியதும். இந்த விவகாரம் குறித்து சிபிஐ   விசாரணை வேண்டும் என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள். தமிழக அரசாங்கமும் பயப்படுகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு, தமிழக எம்.பி.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தான் மன வேதனை என்றார்.

பாராளுமன்றத்தில் ராகுல் பேசியது என்ன?

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு, 18-வது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தின் 6-வது நாளான இன்று, `ஜெய் சம்விதான் (அரசியலமைப்புச் சட்டம்)’ எனக் கூறி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவன், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகியோரின் உருவப்படங்களை காட்சிப்படுத்தி, “நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அகிம்சையை வலியுறுத்தி, இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அகிம்சையால் பயத்தைப் போக்கியிருக்கிறார்கள்

ஆனால்,  தற்போது தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்துக்கொள்பவர்கள்  வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு மற்றும் பொய்களைப் பரப்புவதல்ல.” எனக் கூறினார்.

அப்போது எழுந்து குறுக்கிட்ட பிரதமர் மோடி, “இது முழுக்க முழுக்க இந்து சமூகத்தின்மீதான தாக்குதல்…” எனக் கண்டனம் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை குறிப்பிட்டு, “அகிம்சை பற்றி பேச ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் இந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள், அவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி நினைக்கிறாரா? தனது கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, `பா.ஜ.க-வும், அதன் பிற அமைப்புகளும், பிரதமர் மோடியும் முழு இந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளல்ல என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்துகிறேன்.” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பா.ஜ.க, இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ராகுலின் பேச்சு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  ஒரு மாதத்துக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் வாக்குக்காக மட்டும்  இந்து கோவில்களுக்கு சென்று மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது.