காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்ட வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரான டி. ராஜா-வின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் அல்லது புவனகிரி நாடாளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கொள்கையளவில் இதனை ஏற்றுக்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரைவில் இதுகுறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சோனியா காந்தியை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அவர் உடல்நிலை காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலகி ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.