டில்லி
கேரள மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை இச்சம்பவம் உலுக்கியுள்ளது.
இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், மார்ட்டின் என்பவர் மதவழிபாட்டு கூட்டரங்கில் வெடிகுண்டு வைத்தது நான் தான் எனக்கூறி சரணடைந்துள்ளார். மார்ட்டினிடம் விசாரணை நடத்திய கேரளா காவல்துறையினர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது மார்ட்டின் தான் என உறுதிப்படுத்தி உள்ளனர்.
கேரள குண்டு வெடிப்பு சம்பவத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில்,
“கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
இதில் உயிரிழந்தவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.
ஒரு நாகரீக சமூகத்தில் வெறுப்புக்கும் வன்முறைக்கும் இடமில்லை. அரசு விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்”
என்று தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]