புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

 

கடந்த 2006 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.  அதற்குப் பிறகு பல காரணங்களால் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை.  தற்போது அங்கு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.  இன்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேஇயை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாகக் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாகப் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது.

மூன்று கட்டத்திலும் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கடைசி ஒரு மணி நேரமான மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள் என 117 பேர் திருநங்கைகள் உள்ளனர்.

இந்த மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.