சரண் மாவட்டம், பீகார்

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் 30 ஆம்புலன்ஸ்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பீகாரும் ஒன்றாகும்.    நேற்று ஒரே நாளில் 13,466 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 6.4,114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்றுவரை இங்கு 3,139 பேர் பாதிக்கப்பட்டு 4,49,063 பேர் குணம் அடைந்து 1,15,066 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் பீகாரில்  கொரோனா நோயாளிகளை எடுத்துச் செல்லும் ஆம்புலன்சுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தேவை அதிகரிப்பால் கட்டுப்பாட்டு விதிகளை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீறுவதாகச் செய்திகள் வெளியாகின.   இந்நிலையில் பீகார் மாநிலத்தில் சரண மாவட்டத்தில் உள்ள அம்னவுர் பிளாக் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஆம்புலன்சுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ் என அழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சன், “கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வாங்கப்பட்ட ஆம்புலன்சுகள் அம்னவுர் பகுதியில் நி|றுத்தபடுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.  அங்கு உடனடியாக சோதனை இடச் சென்றோம்.  விஷயம் அறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.

நாங்கள் சென்ற போது அங்கு 30 ஆம்புலன்சுகள் மட்டுமே இருந்தன.   இந்த அமபுலன்ஸுகள் நிறுத்தப்பட்டிருந்த இடம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ் பிரதாப் ரூடிக்கு சொந்தமான இடம் ஆகும்.   இந்த ஆம்புலன்சுகள் பானர் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன.  நாங்கள் பாதுகாவலர்கள் முன்னிலையில் அந்த துணிகளை அகற்றியதில் உள்ளிருந்த ஒவ்வொரு ஆம்புலன்சுகளிலும் ரூடியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

தற்போது மாநிலத்தில் ஆம்புலன்ஸ் தேவை அதிகமாக உள்ள போது இவை ஏன் மறைத்து வைக்கப்பட்டிருந்தன?   அவை ஏன் தற்போது உபயோகப்படுத்தவில்லை?  இவ்வாறு இங்கு ஆம்புலன்சுகள் மறைத்து வைக்கப்பட்டதை ரூடி மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவித்துள்ளாரா?   அப்படி என்றால் மாவட்ட நிர்வாகம் ஏன் இவற்றைப் பயன்படுத்தவில்லை? மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய ஆம்புலன்சுகளை வீணாக வைக்கலாமா?” எனச் சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரூடி, ”பப்பு யாதவ் ஒரு மட்டமான அரசியலை நிகழ்த்துகிறார்.  அவருக்கு தற்போது சரண் மாவட்டத்தில் எத்தனை ஆம்புலன்சுகள் உள்ளன என்பது குறித்து ஒன்றும் தெரியாது.   மாவட்டத்தில் 80 ஆம்புலன்சுகள் உள்ளன  அவற்றில் 50 இயக்கத்தில் உள்ளன.  இப்போது போதுமான ஓட்டுநர்கள் இல்லாததால் மீதமுள்ள 30 ஆம்புலன்ஸுகள் ஓர் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.  பப்பு யாதவின் கேவலமான அரசியல் சரன் மாவட்ட மக்களிடம் எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=1NT2A0a7mss]