லக்னோ:

டெல்லியில் இருக்கும் போது பிரியங்கா காந்தி ஜீன்ஸ் பேண்ட் அணிவதும், உத்திரப்பிரதேசத்தில் புடவை கட்டி பொட்டு வைப்பதும் எல்லோரும் அறிந்ததே என பாஜக எம்பி ஹரீஸ் திரிவேதி கூறியுள்ளார்.


கிழக்கு உத்திரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, உத்திரப் பிரதேச அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.

இது பாஜகவினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், ராகுல் காந்தியை ராவணன் என்றும், பிரியங்கா காந்தியை சூர்ப்பனகை என்றும் விமர்சித்தார்.

உபி அரசியலுக்கு பிரியங்கா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பிறகு, அவரை சாக்லட் முகம் கொண்டவர் என அம்மாநில பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா விமர்சித்தார்.

பிரியங்கா காந்திக்கு அழகிய முகம். ஆனால் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியாது என்று பீகார் அமைச்சர் வினோத் நாராயன் கூறினார்.

இப்போது பாஜக எம்பி ஹரீஸ் திரிவேதி, ஒருபடி மேலே போய், டில்லியில் ஜீன்ஸ் பேண்டும், உத்திரப்பிரதேசத்தில் புடவை கட்டி பிரியங்கா பொட்டு வைப்பதாக கூறியுள்ளார்.

எனக்கோ, பாஜகவுக்கோ பிரியங்கா காந்தி ஒரு பொருட்டே கிடையாது என்றும், ராகுலைப் போல் பிரியங்காவுக்கும் தோல்வியே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

உத்திரப் பிரதேச பாஜக தலைவர்களின் அருவருப்பான பேச்சு மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது