சிம்லா

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலப்பிரதேச மக்கலின் உரிமையை பாஜக நசுக்க எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அபிஷேக் சிங்வி போட்டியிட்ட. காங்கிரஸ் கட்சிக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும்  25 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகள் வாக்களித்ததாலும் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. இமாச்சல பிரதேச மக்கள் இந்த உரிமையைப் பயன்படுத்தி அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுத்தனர். 

ஆனால் பணபலம், ஏஜென்சிகளின் பலம் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இமாச்சல பிரதேச மக்களின் இந்த உரிமையை பா.ஜ.க. நசுக்க எண்ணுகிறது. இதற்காக பாதுகாப்பு மற்றும் அரசு இயந்திரங்களை, நாட்டின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது.

25 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி 43 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பெரும்பான்மைக்குச் சவால் விடுகிறது என்றால், அது சட்டமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரத்தை நம்பியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. 

அவர்களின் இந்த அணுகுமுறை நெறிமுறையற்றது, அரசியலமைப்பிற்கு எதிரானது. இமாச்சல பிரதேச மக்களும், நாட்டு மக்களும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை பேரிடரின் போது மாநில மக்களுடன் நிற்காத பா.ஜ.க., தற்போது மாநிலத்தை அரசியல் பேரழிவில் தள்ள நினைக்கிறது.” 

என்று தெரிவித்துள்ளார்.