சென்னை: சென்னையில், கடந்த மாதம் 5ந்தேதி முதல் புறநகர் ரயில்சேவை இன்றியமையாச் சேவைப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்களும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை கடந்த மாதம் (அக்டோபர்) 5ந்தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல சென்னையில், மெட்ரோ ரயில் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
புறநகர் ரயில் சேவையில் முதல்கட்டமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரசால் சான்றளிக்கப்படும் இன்றியமையாச் சேவைப் பணியாளர்களின் வசதிக்காக 3 சேவை மட்டும் இயக்கப்பட்டது. பின்னர் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லும் வசதிக்காக அவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் தாங்களும் பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வந்தனர். தமிழகஅரசும் மக்களின் வாழ்வாதாரத்திற்காக புறநகர் ரயில் சேவையை முழுமையாக தொடங்க வேண்டும் என கடிதம் எழுதியது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள்.
தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்.
சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.
குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்.
அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.
பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]