லண்டன்: இங்கிலாபந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தொடங்க இருப்பதாகவும், குறிப்பிட்ட விருந்தினர்களுடன் மட்டுமே இறுதிச்சடங்கு நடைபெறும், பொதுமக்களுக்கு அனுமதியில்லைஎன பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கும்போது நாடு தழுவிய மவுன அஞ்சலியும் கடைபிடிக்கப்பட உள்ளது. இறுதிச் சடங்கு நாளான ஏப்ரல் 17ஆம் தேதியோடு முடிவடையும் வகையில் எட்டு நாள்களுக்கு நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற அந்நாட்டு பிரதமரின் பரிந்துரைக்கு ராணி எலிசெபத் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அரச குடும்பம் இரண்டு வாரங்கள் வரை துக்கம் அனுசரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இறுதிச்சடங்கில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அதே வேளையில்,, இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி அவற்றை விட்டுச்செல்ல வேண்டாம் என்றும், மலர் அஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.