பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்கள் குறித்து U.D.I.S.E.  எனப்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை, தேசிய அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில், தேசிய அளவில் தொடக்கப்பள்ளி கல்வியை 100 மாணவ-மாணவிகளில் 94 பேரும், இடைநிலை பள்ளி கல்வியை 75 பேரும், மேல்நிலை பள்ளி கல்வியை 70 பேரும் நிறைவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.டி. பிரிவினரில் 100 மாணவர்களில் 61 பேர் முழுமையாக பள்ளி படிப்பை நிறைவு செய்வதாகவும், எஸ்.சி. பிரிவினர் 65 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 73 பேரும், பொதுப்பிரிவினர் 74 பேரும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆண், பெண் விகிதாச்சார அடிப்படையில் இருவருமே சமமாக 70 பேர் முழுமையாக பள்ளிப்படிப்பை முடிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநிலங்களின் அடிப்படையில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழகத்தில் 86. 2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் 85. 8 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா 85. 6 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

[youtube-feed feed=1]