புதுவை

புதுவை மாநில பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுவை மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா கடந்த 9 ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாகக் கடிதம் அனுப்பினார். தாம்  சாதி மற்றும் பாலின ரீதியாகத் தாக்குதலுக்கு உள்ளானதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ஆளுநர் மற்றும் சபாநாயகர் தெரிவித்து இருந்தனர். அவரது பணியில் திருப்தி இல்லாததால் பதவி நீக்கத்துக்கு முதல்வர் பரிந்துரை செய்தார் என்றும் கூறப்பட்டது.

ஒரு அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனடியாக வெளியிடப்படும்,  ஆயினும் சந்திர பிரியங்கா விவகாரத்தில் 10 நாட்களுக்கு மேலாகியும் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.

எனவே மக்களிடையே அவர் ராஜினாமா செய்தாரா, அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவி வந்தது.  தற்போது புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் நீக்கத்திற்கு குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த பதவி நீக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்து புதுச்சேரி அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. இதையொட்டி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதி ஆகி உள்ளது.