வாடிகன்
மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது;
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அ கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
இதற்காக சிகிச்சை பெற்ற அவர் 38 நாட்களுக்குப்பின் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனது பெரும்பாலான பணிகளை குறைத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். சமீபத்தில் வாடிகனில் நடந்த புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் உயிர்ப்பு பெருவிழா பிரார்த்தனைகளிலும் பங்கேற்றார்..
நேற்று முன் தினம் காலையில் திடீரென உடல்நிலை மோசம் அடைந்தால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். போப் ஆண்டவர் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல் வெளியிட்டு வருகின்றன.
ம்றைந்த போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெறும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. இறுதிச்சடங்கு வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் பசிலிகாவில் நடைபெற உள்ளது. போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.