சென்னை:  முதலமைச்சர் ஸ்டாலின்  பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கும் நிலையில், அதற்கான டோக்கன் இன்னும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில்,  பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்புடன்  ரொக்க பணமும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக 2021ல் பதவி ஏற்றம்,  கடந்த 2022ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. வெறும்,பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்,  பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்க பணம் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில்,   பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடுசெய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ரேசன் கடைகளில் கூட்டம் ஏற்படாதவாறு,  பொங்கல் பரிசு தொகுப்பு -2026 என்ற தலைப்பில் டோக்கன் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 244 ரேஷன் அட்டைதாரர்களில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு தகுதி உள்ளவர்களாக 2 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரேஷன் அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன. பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய பொருட்கள் இன்னும் 2 நாட்களில் வந்துவிடும். ஏற்கனவே இலவச வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகளுக்கு வந்துள்ளன. நேற்று டோக்கன்கள் வரப்பெற்றுள்ளன. அதில் கடையின் பெயர் மற்றும் எண், டோக்கன் எண், ரேஷன் கார்டு தாரரின் பெயர், ரேஷன் அட்டை எண், கிராமம், தெரு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அந்த டோக்கன் திரும்ப பெறப்படும். டோக்கன் பெறாதவர்கள், பரிசு தொகுப்பு வாங்க வரும்போது அவற்றை கடையிலேயே நிரப்பி கொடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என்றார்கள்.

ரொக்கம் உண்டா? பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

[youtube-feed feed=1]