சென்னை :
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து நேற்று தெரிவித்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் புயலை கிளப்பியுள்ளது.

‘’அ.தி.மு.க.வுடன் பா.ஜ. க. மக்களவை தேர்தலுக்கு தான் கூட்டணி வைத்திருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க.வுடனோ அல்லது தி.மு.க.வுடனோ பா.ஜ.க.கூட்டணி வைக்கலாம்’’ என கூறினார்.
’’இந்த இரு கட்சிகள் இல்லாமல் பா.ஜ.க.வே புதிதாக தனி அணியை உருவாக்கலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம்’’ என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை தி.மு.க. திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘’தி.மு.க.வின் தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல’’ என தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
’’கூட்டணி குறித்து கருத்து சொல்லி, எதிர்க்கட்சி தொண்டர்களை பொன்.ராதாகிருஷ்ணன் குழப்ப நினைக்கிறார்’.பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை’’ என தி.மு.க.வின் மற்றொரு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
– பா.பாரதி