சென்னை

காவல்துறைக்கு சவுக்கு சங்கர் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியுமில்லை என காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ராத்தோர் தெரிவித்துள்ளார்.

 

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சவுக்கு சங்கர் தாயார் கமலா ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்துள்ளார்

மனுவை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,

”சவுக்கு சங்கரை தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரிகள் பழிவாங்கும் விதமாக அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக மனுதாரர் கூறுவதும் உண்மையில்லை. சவுக்கு சங்கருக்கு எதிராக போலீஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பகையோ, காழ்புணர்ச்சியோ இல்லை. அவர் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கரை தாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறை அதிகாரிகளுக்கும் கிடையாது. அவர் காயம் அடைந்த சம்பவத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் எந்த சம்மந்ததும் கிடையாது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்கதான் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.