தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 5

கனவின் குழந்தைகள்

பா. தேவிமயில் குமார்

 

உலகம் சிறியதுதான்

உள்ளத்தைப் பெரிதாக்கும் போது !

 

பெயரளவிலான குறிக்கோள்கள் வேண்டாம்

பேர் சொல்லும் குறிக்கோள்களே வேண்டும் !

 

மண்ணுலகை வென்றவர்கள் கூட

முதலில் நம்பியது, தன்

மனதை மட்டும்தான்

 

தன்னைத்தானே நேசிப்பது தான்

தன்னம்பிக்கையின் முதல் படி

 

முயன்று கற்றல் என்பதே

மனதிற்கு நீ அளிக்கும் முதல் பயிற்சி

 

நம்பி வந்தவர்களை என்றும்

கைவிடாது நம்பிக்கை !

 

உன்னையே நீ ஆளக்கற்றுக்கொள்

அதுவே பின்னாளில்,

உலகை ஆள வழிவகுக்கும் !

 

முன்னேற்றம் என்பது திரைப்படத்தில் வரும்,

மூன்று மணி நேர காட்சியல்ல !

 

மணித்துளிகளை மதிப்பவனே,

மற்றவர்கள் மதிக்கும்

மனிதனாக வருவான் !

 

எண்ணங்களே உலகை ஆள்கின்றன,

என உணரும் நேரமே, நீ உயரும் நேரம் !

 

நாம் காணும்

காட்சிகள் அனைத்தும்

கனவின் குழந்தைகளே !

எனவே நம்பிக்கைக்

கனவுகளை காணுங்கள் !

கனவுகளை கொண்டாடுங்கள்

காண்பவை உங்கள் வசமாகும் !

 

இலட்சியம் ஒன்றே நம்

ஆசைகளின் திறவுகோள் !

 

தேவையானக் கருத்துக்களை

திணித்துக்கொள்,

தேவையில்லாதக் கருத்துக்களை

தணிக்கை செய்துகொள் !

 

வாழ்க்கையில் முதலீடு என்பது

சிந்தனை செய்வதும்,

செயல்படுத்துவதுமே ! ஆகும்,

 

சிந்தனையும்

சாதனையும்

பயணமும், பாதையும்

போல ஒன்றானது !

பிரிக்க முடியாதவை !

 

நீயும் மனிதன் தான்,

மற்றவர் சாதித்ததை விட

நீ அதிகமாக சாதிக்க முடியும் !

மாற்றம்……..

மற்றவரிடமிருந்தல்ல…..உன்

மனதில் இருந்தே தொடங்கட்டும் !