டெல்லி: புரெவி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி விவரம் கேட்டறிந்தார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது. இந் நிலையில் புயல் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

இது குறித்த விவரத்தை பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி  இருப்பதாவது: புரெவி புயலை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசினேன். புரெவி புயல் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து ஆலோசித்தோம்.

தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். புயல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.