டெல்லி: கொரோனவை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  அவமானங்களின் மையமாக பிரதமர் மோடி திகழ்கிறார்  என கடுமையாக சாடியுள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோய் குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக, ஏழை எளிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் உட்பட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும்,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்திய அரசை  கடுமையாக விமர்சனம் செய்து  வருகிறார். கொரோனா தொற்றை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று பதிவிட்டுள்ள 2 டிவிட்டில் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். அவரது டிவிட் பதிவுடன் ஜிடிபி தொடர்பான வரைபடத்தையும் இணைத்துள்ளார்.

அவமானங்களின் மையம் பிரதமர் மோடி என்றும்,

அவரது தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது

குறைந்தபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தி,

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது

என்று சாடியுள்ளார்.  அவர் டிவிட்டுடன் இணைத்துள்ள வரைபடத்தில்,

.2020-21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, 40 வருடங்களில் இல்லாத மோசமான வீழ்ச்சி என மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து, ராகுல் காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரும்பூஞ்சை தொற்று தொடர்பாக, 3 கேள்விகளை எழுப்பி ராகுல் டிவிட் பதிவிட்டிருந்தார். அதில்,

1. ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறைக்கு என்ன செய்யப்படுகிறது?

2. இந்த மருந்தை நோயாளிக்கு பெறுவதற்கான நடைமுறை என்ன?

3. சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, அரசாங்கத்தால்  பொதுமக்கள் ஏன் தொந்தரவு செய்யப்படுகிறார்கள்? “ என கேள்வி எழுப்பி உள்ளார்.