சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்து வரும் நிலையில், உடல்நலத்தை காக்கும் கள் இறக்குமதி விற்பனைக்கு தமிழ்நாடு  அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி  வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,   மனுவுக்கு தமிழ்நாடு அரசு  பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.

தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. ஆனால், உடல்நலத்தை காக்கும் இந்த கள் விற்பனைக்கு  தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க மறுத்து வருகிறது. அதே வேளையில் அரசே டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் உடல்நலத்தை பாதிக்கும் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை அதிகம் என்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், உழைக்கும் வர்க்கத்தினர், குறைவான விலையில் கள்ளச்சாராயம் கிடைப்பதால் அதை வாங்கிக்குடித்து தங்களது உயிர்களை விட்டு வருகின்றனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு சம்பவமும் இதுபோன்ற அரங்கேறி உள்ளது. அப்பாவி மக்கள் 60 பேர் பலியான நிலையில், பலரது கண்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பரபரப்பான நிலையில்,  புதுக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன்,  தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  “தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் உள்ளது. பனை மரத்திலிருந்து நுங்கு, பனை ஓலை, பதநீர், பனங்கற்பட்டி போன்ற பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. தமிழகத்தில் ஏராளமானவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

மதுப்பழக்கத்தால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள், சங்க காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த கள்ளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் உடல் சூட்டை குறைப்பதோடு வைட்டமின் பி2, பி12 உள்ளிட்ட பல சத்துகளும் அதில் உள்ளன.இந்திய அரசியலமைப்புச் சட்டம் 47-வது பிரிவுபடி குடிமக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் மது உற்பத்தி மற்றும் விற்பனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே உடல் நலனுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கள்ளை இறக்க அனுமதி வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளத.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. இதனால் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.