கொழும்பு

லங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை அரசு தானே புதைத்து விடுகிறது.  இறந்தவர்கள் முகத்தைப் பார்க்கவோ இறுதிச் சடங்கில் க்லந்துக் கொள்ளவோ யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இலங்கையில் அதிக அளவில் மரணம் நிகழ்வதால் சடலங்களைப் புதைக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  மேலும் கொரோனா தொற்று இதனால் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டுச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி இலங்கை தொற்று நோய் பரவல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்களை புதைப்பதற்கு பதில் எரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இது மக்களில் சில பிரிவினருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

கிறித்துவ மற்றும் இஸ்லாம் மத வழக்கப்படி இறந்தவர்களைப் புதைக்க வேண்டும் எனவும் எரியூட்டக் கூடாது எனவும் விதிமுறைகள் உள்ளன.  இதனால் பல இலங்கை மக்கள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.