பட்டணந்தான் போகலாமடி.. அதெல்லாம் பழைய காலம்..

பெரு நகரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை நோக்கி கொத்துக்கொத்தாய் மக்கள் தேடி ஓடிய காலங்கள் மாறி தற்போது சிறு நகரங்கள், கிராமங்களை நோக்கிய நகர்தல் வேகமாகப் பரவி வருகிறது.

25 வயதான அக்‌ஷை மான்ஹட்டனில் ரூ. 1,40,000/- வாடகையில் வெகு சொகுசாக என்ஜாய் செய்து கொண்டிருந்த வாழ்வைத் துறந்து, மகாராஷ்டிரா அவுரங்காபாத் அருகேயுள்ள தன் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார்.  “கொரோனா தொற்று தீவிரமாகிட்டு இருக்கிற சூழலில் இனியும் அமெரிக்கால இருக்கிறது சரியாப்படல. இங்க உள்ள நெட்  கனெக்‌ஷன் என்னோட ஒர்க் ஃபிரம் ஹோம்க்கு போதுமாதா இருக்கு.  அதான் ஊருக்கே வந்துட்டேன்” என்கிறார்.

அவர் மட்டுமல்ல.  பெரும்பாலான ஐடி ஊழியர்கள், கார்ப்பொரேட் நிறுவன ஒயிட் காலர் பணியாளர்கள் அனைவருமே தங்களது பெரு நகர வாழ்க்கையை வேண்டாமென்று உதறி எறிந்து விட்டு தங்களின் தேடி ஓடி வருகின்றனர்.

“முக்கியமாக இனி WFH தான் ஒரே ஆப்சனா இருக்கப் போகுது.  அப்டி இருக்கும் போது எதுக்கு பெரிய ஊர்கள்ல இருந்துட்டு அதிக வாடகை மற்றும் அது சம்பந்தப்பட்ட செலவுகள்னு தேவையில்லாம செலவழிக்கணும்.  அதோட பெரு நகரங்களில் நோய் தொற்றும் தீவிரமாக இருக்கு.  இப்போ யார்ட்டருந்தும் மெயில்கள் கூட வராதில்ல.  வெறும் வாட்ஸ்ஆப் மெசேஜ் தான்.  அதுக்கு இந்த 4ஜி கனெக்‌ஷன் போதுமானது” என்கின்றனர்.

ரியல் எஸ்டேட் வல்லுனர்களும் இதை உறுதி செய்கின்றனர்.  தற்போதே 10 – 20% வரை பெருநகரங்களை விட்டு வெளியேறி வருகின்றனராம்.

– லட்சுமி பிரியா