ஜம்மு

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா அனந்தநாக் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்தியா கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகத் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) அறிவித்தன.

மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தன.  இன்று பி.டி.பி. பாராளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாராளுமன்ற குழு தலைவர் சர்தாஜ் மத்னி, பி.டி.பி. கட்சியின் மூன்று வேட்பாளர்களையும் அறிவித்தார்.

அதில் அனந்தநாக் தொகுதியில் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவார் என்று அறிவித்தார். ஸ்ரீநகரில் கட்சியின் இளைஞரணி தலைவர் வாகித் பாராவும், பாரமுல்லாவில் முன்னாள் எம்.பி. மிர் பயாசும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே மெகபூபா முப்தி பேசும்போது, ஜம்முவில் உள்ள உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பி.டி.பி. ஆதரவு அளிக்கும் என்றது குறிப்பிடத்தக்கதாகும்.