நியூஸ்பாண்ட்:
பணத்துடன் நிர்கவாகிகள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதால் டி.டி.வி. தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கிய தினகரன், தனக்கு பிரச்சாரம் செய்ய கார்பரேட் முறைப்படி குழுவை கட்டமைத்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியை நான்கு பகுதிகளாக பிரித்து நான்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கீழே வார்டுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த “வார்டு தலைவருக்கு” கீழே குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு ஒருவர் என்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த பொறுப்பாளர்கள்தான் வாக்காளர்களை கேன்வாஸ் செய்வது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது போன்ற அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவார்.
இவர்கள்தான் பெரும் பணத்துடன் ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து கூறப்படுவதாவது:
“ஆளும்கட்சி வேட்பாளர் மதுசூதனன் ஆதரவாளர்கள், வாக்காளர் ஒருவருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அதைவிட இரண்டு மடங்காக.. அதாவது வாக்காளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அளிக்க தினகரன் தரப்பு தீர்மானித்தது.
இந்த பணம், கீழ்மட்டத்தில் உள்ள பொறுப்பாளர்களிடம் அளிக்கப்பட்டது.
ஆனால் ஆளும்கட்சி வேட்பாளரான மது சூதனனன் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தபோது கண்டுகொள்ளாத அதிகாரிகள், டிடிவி தரப்பினர் பணம் கொடுக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் தடுத்துவிட்டனர்.
இதனால் வாக்காளர்களிடம் எப்படி பணத்தை சேர்ப்பது என்று தினகரன் தரப்பு யோசித்தது.
பிறகு, “அடையாளம் குறிக்கப்பட்ட இருபது ரூபாய் தாளை வீட்டுக்கு வீடு அளிப்பது.. தேர்தலுக்குப் பிறகு அந்த நோட்டை காண்பித்து வாக்குக்கு தலா 12 ஆயிரம் ரூபாயை வாக்காளர்கள் வாங்கிக்கொள்வது” என்று முடிவெடுத்தார்கள்.
இதைபோல, வாக்காளர்கள் பலருக்கு 20 ரூபாய் நோட்டை அளித்தார்கள்.
இந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.
ஆனால் பணத்தை வைத்திருந்த கீழ்மட்ட பொறுப்பாளர்கள் நேற்று காலை முதலே எஸ்கேப் ஆகிவிட்டனர்.
தினகரனுக்காக ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய இவர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள், “தினகரன் வெற்றி பெற்றால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. தோல்வி அடைந்துவிட்டால் பணம் கொடுத்து பலனும் இல்லை..” என்று தீர்மானித்தே சொல்லிக்கொள்ளாமல் சொந்த ஊர்களுக்கு வண்டி கட்டிவிட்டனர்.
இந்த தகவலை அறிந்த தினகரன் தரப்பு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. அவர்கள், “பணத்தைப் பற்றி கவலை இல்லை. ஆனால் மக்களுக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாமல் போய்விடுமே” என்று வருந்துகிறார்கள்” என்று கூறப்படுகிறது.
தினகரன் தரப்பினர் வேண்டுமானால் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.. வருத்தமடைந்திருக்கலாம்.
ஆனால் தினகரனோ, “என்கிட்ட சொல்லிட்டுத்தான் ஓடினாங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருப்பார்!