இஸ்லாமாபாத்:

பாகிஸ்தனில் போலியோவை ஒழிக்க மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைமையிலான தொண்டு நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் தீவிர போலியோ ஒழிப்பு முகாம் நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று குவெட்டா நகரில் உள்ள ஷால்கோட் பகுதியில் வீடுவீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் சில பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இரு பெண்கள் துடிதுடித்து இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சொட்டு மருந்து முகாமில் பணியாற்றும் ஊழியர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 84 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.