இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பிரபல நடிகையும், நடனக்கலைஞருமான  கிஸ்மத் பெய்க்  மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபமாக நடிகர், நடிகைகளின் தற்கொலை மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் சின்னத்திரையிலும், சினிமாவில் நடித்துவந்த நடிகை சபர்ணா மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே போல் மலையாள டிவி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையும்,  நடனக்கலைஞருமான  கிஸ்மத் பெய்க் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த இவர்  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை மற்றொரு காரில் சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். சம்பவ இடத்தில் நடிகையின் காரை நெருங்கிய கும்பல் சரமாரியாக சுடத்தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் நடிகை ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது உடலில்  12 குண்டுகள் பாய்ந்திருந்தது. அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மர்ம நபர்களில் துப்பாக்கியால் சுடும்போது, ‘இனி நீ எப்படி ஆடுவாய்’  என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்தக்கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே போல் பிரபல நடிகையான கான்டில் பலோச் மர்ம நபர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.