புதுடெல்லி: திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய்லாமாவை, பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருடன் ஒப்பிட்டு, டிவிட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு, கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியில், இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குத் தடையாய் இருந்துவரும் சீனாவின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த ஹமீத் மிர் என்ற அந்தப் பத்திரிகையாளர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டுகிறார் .

அந்தக் கட்டுரையில், தலாய்லாமாவை தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“தலாய்லாமா எனும் பெயர்கொண்ட சீனாவின் எதிரிக்கு, இந்தியா, பல்லாண்டுகளாய் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை சீனா ஏன் எதிர்க்கிறது? என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்றுள்ளார் அவர்.

தலாய்லாமாவுக்கு கடந்த 1989ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம்.

– மதுரை மாயாண்டி