திரிபோலி:

லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 121 பேர் கொல்லப்பட்டதாகவும், 561 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது.

அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு, கடத்தியும் கொலை செய்யப்பட்டார். அதோடு உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஐ.நா. ஆதரவுடன் தேசிய இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது.
எனினும் அங்கு தொடர்ந்து அரசியலில் நிலையற்ற தன்மை நீடித்ததால், அதே ஆண்டு லிபியாவில் மீண்டும் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போர் மூண்டது.

இந்நிலையில், ஐ.எஸ். உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் லிபியாவில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

மேலும் அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சிகர லிபிய ராணுவத்தின் தளபதி காலிபா ஹிப்தர் தனது படைகளை தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேற வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.நா. ஆதரவு அரசு படை வீரர்கள் திரிபோலியில் குவிந்துள்ளன.
கடந்த சில தினங்களாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது.

இதனால், தலைநகர் திரிபோலியில் பதற்றம் நீடிக்கிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மருத்துவக் குழுவினர் மீதும் காலிபா ஹிப்தரின் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 ஆம்புலன்ஸுகள் தகர்க்கப்பட்டன.

லிபியாவின் தலைநகர் திரிபோலி அருகே நடந்து வரும் மோதலில் இதுவரை 121 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 561 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு தரப்பிலும் ஏவுகணைகளை வீசித் தாக்கிக் கொள்கின்றனர். இதில் உயிரிழப்புகள் ஏற்படும் போது ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.