ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா மற்றும் ராமேஸ்வரம் தாம்பரம் புதிய ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை மண்டபம் வருகை தருகிறார்.  மோடி வருகையையொட்டி, அந்த பகுதிகளில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன்,  5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்ற நிலையில், நாளை (ஏப்ரல் 6ந்தேதி) பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.

அத்துடன்  ராமேசுவரம் – தாம்பரம்  இடையே புதிதாக இயக்கப்படவுள்ள பாம்பன் விரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

இந்த  விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை மண்டபம் வருகிறார். இதையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து நாளை (ஏப்ரல் 6) காலை 10.40 மணிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பகல் 11.45 மணியளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வருகிறார். பின்னர், கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் புறப்பட்டு ராமேசுவரம் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். ராமநவமியான நாளை ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்கிறார்.

பின்னர் ரயில்வே சார்பில் நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார். அப்போது, வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, தர்மர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

பாம்பன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி,   ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிரதமர் வருகை தரும் பாம்பன் பாலம், ராமேசுவரம் கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டு வரும் போலீஸார், சந்தேக நபர்கள் தங்கியுள்ளனரா என்று விசாரித்து வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பிரதமர் வருகையையொட்டி ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் எதிர்வரும் 6.4.2025 அன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். தன் பின் வழக்கம் போல் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் பிரதமர் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவிலுக்குள் தரிசனம் மற்றும் தீர்த்தம் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் மற்றும் தீர்த்தம் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.