பிரயாக்ராஜ்: பிப்ரவரி 26ந்தேதியுடன் முடிவடைய உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சி மேலும் நீட்டிக்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 50கோடி பேர் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடுகள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதையும் தாண்டி பல கோடிபேர் நீராடி வருகின்றனர். இதுவரை சுமார் 55 கோடி பேர் நீராடி உள்ள நிலையில், கும்ப மேளா முடிவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கும்பமேளா நிகழ்ச்சி மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதை மறுத்துள்ள பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார், நடந்து வரும் மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்றும், “வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மகா கும்பமேளா நல்ல நேரங்களின் அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டவணையைப் பின்பற்றுகிறது என்றும், பிப்ரவரி 26 அன்று விழா முடிவடையும் என்றும் அவர் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வுக்கு உலகெங்கிலும் இருந்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிகின்றனா். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா கடந்த 37 நாள்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
மகா கும்பமேளா இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்து வருகின்றனர். இதனால், மகா கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்க மறுத்த யோகி தலைமையிலான பாஜக அரசு, மாவட்ட ஆட்சியர் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கும்பமேளாவை நல்ல நாளில் முடிப்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பிப். 26ஆம் தேதி நிறைவடையும். அதுவரை சீரான போக்குவரத்து உறுதி செய்யப்படும். பக்தர்கள் அனைவரும் நெரிசலின்றி புனித நீராடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.