டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு இனிமேல் முன்பதிவு தேவை இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனாவின் 2வது அலை தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் விரைவில் 3வது அலை தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பூசி போடும் இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு வந்தது. அதற்காக  COWIN என்கிற செயலி மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது.  இதன்மூலம் பயனர்கள் முன்பதிவு செய்து, எந்த நாளில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பதை தெரிந்துகொண்டு, அங்கு சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளாலாம்.

ஆனால், ஆன்லைன் பதிவு முறை சாமானிய மக்களுக்கு முடியாத காரியம் என்பதாலும், அதனால் பல சிரமங்கள் உருவானதாலும், இனிமேல்  தடுப்பூசிக்கு முன்புதிவு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி போட விரும்புவோர், அதற்கான முகாம்களுக்கு நேரடியாக சென்று,  முன்பதிவு செய்யாமலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும், இந்த புதிய  நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாக பொது சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.