நியூயார்க்: ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுதும் ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந் நிலையில் யுனிசெப் எனப்படும் ஐநா சபை குழந்தைகள் நிதியம் பிறப்பு விகிதம் மற்றும் ஆயுட்காலம் குறித்த சில தகவல்கள் அடங்கிய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த 2021 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பிறந்திருக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்திருக்கலாம்.

அடுத்தபடியாக சீனாவில் 35 ஆயிரத்து 615 குழந்தைகள், நைஜீரியாவில் 21 ஆயிரத்து 439, பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 161 குழந்தைகள் பிறந்திருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2021 ஆண்டில் மொத்தம் 14 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகளாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.