நெட்டிசன்:
இதே நாளில் அப்பலோவில்  புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் !

1984 அக்டோபர் 5 தமிழகமே
பரபரத்தது . அப்போது முதல்வராக
இருந்த புரட்சித் தலைவா எம்.ஜி.ஆருக்கு
இதே நாளில்தான் திடீர் உடல் நலக்
குறைவு ஏற்பட்டது .
வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு
விடுவதில் சிரமம் ஏற்பட்டது .
உடனே அவரை அழைத்துக் கொண்டு
அப்பல்லோ மருத்துவமனை வந்தார்
ஜானகி அம்மாள் . அவருடன்
எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர்.
சுப்ரமணியமும் உடன் வந்தார் .
உடனே எம்.ஜி.ஆர் மூன்றாவது
மாடியில் இருந்த அறைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.
அங்கிருந்த சூப்பர் டீலக்ஸ் அறையில்
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .
அப்போது அந்த அறையின் ஒரு நாள்
வாடகை ரூ.525 தான் .
எம்.ஜி.ஆர் கூறியபடி யாரிடமும் இந்த
தகவல் சொல்லப்படவில்லை .
ஆனால் , எம்.ஜி.ஆரின் நீல நிற
அம்பாசிட்டர் கார் அந்த காலத்தில்
பிரபலமாக இருந்தது . அவரது கார்
ஏன் அப்போலோ பக்கம் வந்தது
என்ற பரபரப்பு எழுந்தது .
இந்த பரபரப்பு அடுத்த சில நிமிடங்களில்
அப்போலோ மருத்துவமனை முன்பு
ஆட்களைக் குவித்தது .
ஆஸ்துமா தொந்தரவு காரணமாக
எம்.ஜி.ஆர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்ததாக அடுத்த
தகவலும் வெளியானது .
எம்.ஜி.ஆர்.. மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டதை அறிந்து அ.தி.மு.க
அமைச்சர்கள் நெடுஞ்செழியன் ,
ஆர்.எம்.வீரப்பன் , சுகாதாரத் துறை
அமைச்சர் ஹண்டே ஆகியோரும்
மருத்துவமனையில் குவிந்தனர் .
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
அப்பல்லோ மருத்துவமனையின்
தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி ,
“எம்.ஜி.ஆருக்கு ஒரு வார காலமாக சளி
இருந்தது . காய்ச்சல் இருந்தது.
ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர்
இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் . அவர்
குணம் அடைந்து வருகிறார்” என்று
கூறினார் .
பொது மருத்துவமனையைச் சேர்ந்த
டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா ,
அப்போலோ மருத்துவமனையின் டாக்டர்
சி.ரெட்டி , ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி
மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம்
ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை
அளித்து வந்தனர் .
அக்டோபர் 6
அப்போது , தமிழக சட்டசபைக்
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டதற்கு மறுநாள் அக்டோபர்
6 – ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ்
எம்.எல்.ஏ சித்தன் பேசும்போது ,
“எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய
விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்”
என்று கேட்டுக் கொண்டார் .
இதற்கு பதில் அளித்த அமைச்சர்
நெடுஞ்செழியன், “அக்டோபர் 5-ம் தேதி
வெள்ளிக்கிழமை, முதல் அமைச்சர்
எம்.ஜி.ஆருக்கு ஆஸ்துமா போன்று
அறிகுறிகள் இருந்தன .
இதனால் , மூச்சு விடுவதில்
சிரமம் ஏற்பட்டதால் அப்போலோ
மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார் .
முதல்வரின் உடல் நிலையில்
முன்னேற்றம் ஏற்பட்டது . மூச்சு
விடுவதில் இருந்த சிரமம் நீங்கி விட்டது .
நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும்
இருக்கிறார்” என்று கூறினார் .
இன்னொரு புறம் அப்பல்லோவில்
தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி
அளித்த பேட்டியில் ,
“நுரையீரலில் ஒரு வகை திரவம்
சேர்ந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல்
ஏற்பட்டது . அந்தத் திரவத்தை
‘பெரிடோனியல் டயாலிசிஸ்’ முறை
மூலம் முழுவதுமாக வெளியே எடுத்து
விட்டோம் .
சிறுநீரகத்தில் மிகச் சிறிய
அளவில் கோளாறு ஏற்பட்டது . எனவே
சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுக்க
வேண்டாம் என்பதற்காக ‘டயாலிசீஸ்’
மூலம் திரவத்தை வெளியேற்றினோம் .

அவருக்கு இனி சிகிச்சை
தேவை இல்லை . எம்.ஜி.ஆருக்கு
முழு ஓய்வு தேவை . எனவே ஒரு வாரம்
மருத்துவமனையில் இருக்கவேண்டும்.
ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர்
மருத்துவமனையில் தங்கி இருப்பாரே
தவிர சிகிச்சைக்காக அல்ல.” என்று
கூறினார் .
அக்டோபர் 14
தொடர்ந்து சில நாட்கள் உடல் நிலை
முன்னேற்றம் அடைவதாக தகவல்கள்
வெளியாகின . ஆனால் 14 – ம் தேதி
அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள்
வெளியிட்டனர் .
அன்று மாலை டாக்டர்கள்
வெளியிட்ட அறிக்கையில் ,
“13-தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச்
செல்லும்போது சிரமம் இல்லாமலும்,
நல்ல உணர்வுடனும் இருந்தார் . இரவில்
அவரது வலது பக்க கை , கால் அசைவில்
பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர்கள்
கண்டுபிடித்தனர் .
உடனே நரம்பியல் பேராசிரியர்
டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு
எம்.ஜி.ஆர் உடல் நிலையை
ஆராய்ந்தார் .
தலைப் பகுதியில்`எக்ஸ்ரே’ எடுத்துப்
பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில்
இரத்த உறைவு இருப்பது தெரிய வந்தது.
ஆனால் இரத்தக் கசிவு எதுவும் இல்லை.
எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள்
இயங்குவது சீராக உள்ளது . இரத்தச்
சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர்
பிரிவதில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது”
எனக் கூறப்பட்டது .
சிகிச்சைக்காக முதல்வர்
எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு அழைத்துச்
செல்லப்படுவார் என்று தகவல்
வெளியானது .
சென்னை விமான நிலையத்தில்,
தனி விமானம் தயார் நிலையில்
நிறுத்தப்பட்டது .
எம்.ஜி.ஆர். உடல் நிலையைப்
பரிசோதிக்க பம்பாயில் இருந்து
டாக்டர்கள் வரவழைக்கப் பட்டார்கள் .
எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற வேறு
வெளிநாட்டுக்கோ அல்லது
அமெரிக்காவுக்கோ அனுப்பப்பட்டால்
அதற்கு உதவிகள் செய்யப்படும் என்று
ஆளுநருக்கு பிரதமர் இந்திரா காந்தி
தகவல் அனுப்பினார் .
அமைச்சர்கள் அனைவரும்
மருத்துவமனைக்கு வந்து எம்.ஜி.ஆர்.
உடல் நிலை பற்றி டாக்டர்களிடம்
விசாரித்த வண்ணம் இருந்தனர் . திரை
உலகப் பிரமுகர்கள் , நடிகர் , நடிகைகள்
அப்பல்லோவுக்குப் படை எடுத்தனர் .
கோவில்களில் எம்.ஜி.ஆர்., நலம் பெற
வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன .

அக்டோபர் 16
ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் ,
கர்நாடக முதல்வர் ஹெக்டே , மத்திய
அமைச்சர்கள் பலர் எம்.ஜி.ஆர் உடல்
நிலை பற்றி விசாரித்தபடி
இருந்தார்கள் .
புரட்சித் தலைவி ஜெயலலிதா ,
மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித்
தலைவர்கள் , திரை உலகத்தினர்
மருத்துவமனைக்குச் சென்று எம்.ஜி.ஆர்.,
உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர் .
அக்டோபர் 16-ம் தேதி
மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திரா
காந்தி தனி விமானம் மூலம் சென்னை
வந்தார் .
அப்போலோ மருத்துவமனையில்
எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெறும் அறைக்குச்
சென்று உடல் நலம் விசாரித்தார் .
பிறகு டாக்டர்களுடன் இந்திராகாந்தி
15 நிமிடங்கள் கிண்டி ஆளுநர்
மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தி செய்தியாளர்களிடம்
பேசியபோது , “அவர் இருக்கிற
அறைக்குப் போனோம் . படுக்கையில்
இருந்து எழுந்து உட்கார முயற்சி
செய்தார் . ஆனால் அவரை படுக்கையில்
இருந்து எழ வேண்டாம் என்று டாக்டர்கள்
சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள் .
எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர்.,
அடையாளம் கண்டு கொண்டார் . நான்
அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன் .
‘நீங்கள் ஒரு தைரியசாலி . கஷ்டமான
சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து
அவற்றைச் சமாளித்து இருக்கிறீர்கள் .
அதுபோல இப்போதும் மன
தைரியத்துடனும், ஊக்கத்துடனும்
இருங்கள் .
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டும்
அல்லாமல் இந்தியாவில் உள்ள மக்கள்
எல்லோரும் நீங்கள் பூரண குணம்
அடைய விரும்புகிறார்கள்’ என்று நான்
சொன்னதும் எம்.ஜி.ஆர்., புன்னகை
செய்தார் .
எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா
உதவிகளையும் செய்ய மத்திய அரசு
தயாராக இருக்கிறது” என்று கூறினார் .
அக்டோபர் 17
அக்டோபர் 17 – ம் தேதி காலையில்
எம்.ஜி.ஆர் உடல் நிலையைப்
பரிசோதிக்க அமெரிக்காவின் நியூயார்க்
நகரில் புரூக்லீனில் உள்ள டவுன் ஸ்டேட்
மருத்துவமனையின் சிறுநீரகச்
சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர்
பிரீட்மேன் , டயாலிசீஸ் பிரிவு டைரக்டர்
டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் ,
வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப்
பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டோபர்
பிளாக் , டெக்சாஸ் நகர மருத்துவ
கல்லூரி நரம்பியல் பேராசிரியர் டாக்டர்
ஸ்ரீபரதராவ் ஆகியோர் வந்தனர் .
அவர்களை சுகாதாரத்துறை
அமைச்சர் ஹண்டே தனி விமானத்தில்
சென்னைக்கு அழைத்து வந்தார் . அப்பல்லோ மருத்துவமனையில்
எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர் .

பின்னர் , அமெரிக்க மருத்துவர்
டாக்டர் பிரீட்மேன் அளித்த பேட்டியில் ,
“எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே
பாதிக்கப்பட்டு இருக்கின்றன . மாற்று
சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப்
பிரச்சினையும் இல்லை .
எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல்
அமைச்சர் எம்.ஜி.ஆர் பழைய நிலையை
அடைந்து வழக்கமான வாழ்க்கையைத்
தொடர முடியும் .
அவர் 67 வயதிலும் இளமையுடன்
இருக்கிறார் . அவர் குணம் அடைய
சிறிது காலம் பிடிக்கலாம் . இன்னும்
3 மாதத்தில் அவரால் நடக்க முடியும்”
என்று கூறினார் .
டாக்டர் ஸ்டிரிலிங் மேயர்
சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு
தொடர்ந்து சிகிச்சை அளித்தார் .
மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை
பரிசோதனைச் செய்துவிட்டு ,
மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா
புறப்பட்டுச் சென்றார்கள் . தொடர்ந்து
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது .
நவம்பர் 5 – ம் தேதி எம்.ஜி.ஆர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
புரூக்ளீனில் உள்ள டவுன் ஸ்டேட்
மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டார் .
அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று
அறுவைச் சிகிச்சை நடந்தது . இதன்
பின்னர் பூரண குணம் அடைந்த
எம்.ஜி.ஆர்., 1985 – ம் ஆண்டு பிப்ரவரி
4 – ம் தேதி சென்னை திரும்பினார் .
.