சென்னை: நீர்நிலைகளில்  அரசு மற்றும் தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தொடர்பாக  ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்து உள்ளது. இல்லையேல் தலைமைச்செயலாளரை ஆஜராக வைக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு கட்டிடங்கள்,நீர் நிலைகளை ஆக்கிரமித்தே கட்டப்பட்டு உள்ளன. இது தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோல பல தனியார் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்  நிறுவனங்கள், தனி நபர்கள் என பலர் அரசுக்கு சொந்தமான இடங்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருகின்றனர். இது தொடர்பாகவும் பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன.

சமீபத்தில்,  கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளை  தனியார் மற்றும் அரசு அலுவலங்கள் ஆக்கிரமித்து உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தனி தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து இன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமைப்புகள் அனுமதிக்கப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.  முறையான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என  எச்சரிக்கை செய்து. வழக்குகளை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தது.