சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
மேலும் இன்று 9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, மொத்தம் 54,500 நபர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையின்போது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு தங்க வைப்பதற்காக, மாநகராட்சியின் சார்பில் 215 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆகியோருக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சமையல் கூடங்களில் பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க ஏதுவாக அரிசி மற்றும் மளிகைப்பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு 22.10.2025 முதல் 27.10.2025 அன்று இரவு வரை மொத்தம் 4,12,150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (28.10.2025) காலை 9 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, திருவொற்றியூர் மண்டலத்தில் 10,000 நபர்கள், மணலி மண்டலத்தில் 5,000 நபர்கள், மாதவரம் மண்டலத்தில் 3,500 நபர்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 18,000 நபர்கள், ராயபுரம் மண்டலத்தில் 17,000 நபர்கள், பெருங்குடி மண்டலத்தில் 1,000 நபர்கள் என மொத்தம் 54,500 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 22.10.2025 முதல் 28.10.2025 (இன்று) காலை வரை 4,66,650 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.