சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு  உள்ளதாகவும்,  இன்று 13 மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில்,  அக்டோபர் 2வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க சாதகமான சூழ்நிலை உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க உள்ளதால் வரக்கூடிய நாட்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி வரையில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று (சனிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் 9-ந்தேதி (புதன்கிழமை) வரை தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் அக். 9 தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, சேலம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, திருப்பூர், காரைகால், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானஅல்லது மிதமான மழை பெய்யும்.