சென்னை:  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தோடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,  அரசு போக்குவரத்து துறையினருக்கு  தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது.

வடகிழக்கு பருவ மழை, புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன்,   சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

* சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்.

* காட்டாற்று ஓர சாலைகளில் பேருந்தை இயக்கும்போது கவனமாக வெள்ளத்தின் தன்மையை அறிந்து இயக்க வேண்டும்.

* தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகள் பேருந்தை இயக்க சொன்னாலும் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும்.

* பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.

* பேருந்துகளில் பழுது தொடர்பாக புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என கண்காணித்தபடி கவனமாக இயக்க வேண்டும்.

* பணிமனைகளில் உள்ள டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்.

* இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்பாடு குறித்து முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

இவ்வாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.