சென்னை: வீதி வீதியாக உள்ள டாஸ்மாக்கால் யாரும் கெடுவதில்லையா? என்னை பார்த்துதான் பொதுமக்கள் கெடுகிறார்களா? நீதிமன்ற வளாகத்தில் டிடிஎஃப் வாசன் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். அவருக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

டிடிஎஃப் வாசன் விவகாரத்தில், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அத்துமீறி நடந்துகொள்வதாகவும், வேண்டுமென்றே அவர்மீது பல்வேறு வழக்குகளை போட்டு முடக்க முயற்சித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்தார். இவருக்கு மாநிலம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இதற்கிடையில், அவர் போக்குவரத்து விதிகளை மீறி பைக்கில் அதிவேகமாக செல்வது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவாகின. அவருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து,  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மராட்டியத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார்இதில் டிடிஎஃப் வாசன் படுகாயமடைந்தார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு சென் னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 45 நாட்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.  இதைத்தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் பைக் ஓட்டுவதை நிறுத்தினார். தற்போது உடல் நலம் தேறி உள்ள வாசன், கார் மூலமாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருகிறார்.

இந்த நிலையில் தான் தற்போது டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்றுள்ளார். இந்த வேளையில் அவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மே  15ம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டே வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். இதுதொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் மணிபாரதி சார்பில் அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் உள்பட 6 பிரிவுகளில் டிடிஎஃப் வாசன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மதுரை நீதிமன்றத்தில்  டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுப்புலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள டிடிஎஃப் வாசனை போலீஸார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு செய்தியாளர்களை கண்டதும், ”என்னை பார்த்து தான் பொதுமக்கள் கெடுகிறார்களா? வீதி வீதியாக டாஸ்மாக் உள்ளது. அதனால் யாரும் கெடுவதில்லையா?. சாலையில் சென்று நின்று பாருங்கள். எத்தனை பேர் ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மீறி பயணிக்கிறார்கள்” என்று ஆவேசமாக  கூச்சலிட்டபடியே சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார்,  அவரை  குண்டுக்கட்டாக தூக்கி வாகனம் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.