திருச்சி: என்னை யாராலும் அரசியலில் இருந்து விரட்ட முடியாது, நான் உயிர் உள்ள வரை அரசியலில் இருப்பேன் என திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட கூட்டத்தில், கட்சி தலைவர் செல்வ பெருந்தகை முன்னிலையில், முன்னாள் எம்.பி. திருநாவுகரசு கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூத்த கட்சி நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலையில், அவர் சில காலம் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதனால்,  அவர் வேறு கட்சிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் பரவின.  இந்த நிலையில்,  என்  உயிர் உள்ள வரை அரசியலில் இருப்பேன் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.   இந்த கூட்டத்தில் திருச்சி  முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ்,  தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும்  மாவட்ட தலைவர்கள் , நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதுகுறித்து டிவிட் பதிட்டுள்ள செல்வபெருந்தகை, திருச்சி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (19.07.2024) எல்.கே.எஸ். மஹாலில் எனது தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றைக் குறித்து ஆலோசனை செய்தோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், AICC செயலாளர் திரு.கிறிஸ்டோபர் திலக் அவர்கள், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள். மேடையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  திருநாவுக்கரசர்,  இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் முதன்மையான கட்சியாக மாற்ற வேண்டும் என்பதாகும் என்றவர்,  மாவட்டம் வாரியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகளை சரி செய்வது, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது போன்ற பல்வேறு மாற்றங்களை செய்வதற்காக நடத்தப்படுகிறது. மாவட்டம் மாநில அளவிலான கட்சியை பலப்படுத்த சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உள்ளது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் தேர்தலில் போட்டியிட வேண்டும். மிக முக்கியமான தேர்தலாக பார்க்கக்கூடியது உள்ளாட்சித் தேர்தல் ஆகும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான பதவிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். வெற்றி அல்லது தோல்வி எதுவாக இருந்தாலும் நாம் நிச்சயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மிகக் குறைவான இடங்களில் பதவிகளில் உள்ளனர். ஆகையால் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய தேர்தல்களில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் அதற்கு கூட்டணி கட்சியை வலியுறுத்தி நமக்குத் தேவையான இடங்களை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் குறைந்தது 100 சேர்மன் ஆவது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளுக்கு தேவையான சலுகைகள் பதவிகள் வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் கட்சி மென்மேலும் வளர்ச்சி அடையும், அதுவே இல்லை என்றால் கட்சி வளராது. என்னை கடந்த முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு நன்றி.

என்னால் முடிந்த அனைத்து திட்டங்களையும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் செயல்படுத்தி உள்ளேன். ஆனால் எனக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் மந்திரியாக பதவியில் இருந்து உள்ளேன், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். ஆனால் எனக்கு சீட் வழங்க மறுக்கப்பட்டது அப்போதும் நான் பேசாமல் இருந்தேன் என்று கூறியவர், என்னை அரசியலில் இருந்த விரட்ட ஒருகூட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால், என்னை ஒருபோதும்   தமிழ்நாட்டிலிருந்து   விரட்டி அடிக்க முடியாது. நான் அரசியல் செய்வேன், என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என்று கூறினார்.

மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை  முன்னிலையில், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.