வத்மால் 

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் மகாராஷ்டிராவில், 5 கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19 ஆம் தேதி முதற்கட்டமாக, 5 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. நாளை மறுநாள் இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இன்று பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி யவத்மாலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். யவத்மால் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி போட்டியிடுகிறது.

நிதின் கட்கரி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டீலுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது  மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது இடைவெளிக்குப் பிறகு, உடல் நலம் தேறிய நிதின் கட்கரி மேடையில் தனது உரையைத் தொடர்ந்தார்.

நிதின் கட்கரி எக்ஸ் தளப் பதிவில்,

நான் மகாராஷ்டிர மாநிலம் புசாத் நகரில் நடைபெற்ற பேரணியின் போது வெப்பம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளேன்,  மேலும் அடுத்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். உங்களுடைய அன்பிற்கு நன்றி” 

எனத் தெரிவித்துள்ளார்.