கூடலூர்

கேரளாவில் இருந்து வருவோருக்கு கூடலூர் எல்லையில் தீவிர நிபா வைரஸ் பரிசோதனை நடந்து வருகிறது.

சமீபத்தில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதித்து இறந்தார். இதைத்தொடர்ந்து வாலிபருடன் தொடர்பில் இருந்த 472 பேரை கண்காணித்து வருகின்றனர்.

கண்ணூரில் 2 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணி பகுதி, மலப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளது. மலப்புரத்தில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர்.

நிபா வைரஸ் நீலகிரியில் பரவாமல் இருக்க கூடலூர் நாடுகாணி எல்லையில் சுகாதாரத் துறையினர் நேற்று முதல் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.