பெங்களூரு

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ தீவிர விசாரணை செய்து வருகிறது

கடந்த மார்ச் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. என்  ஐ ஏ இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை அதிகாரிகள் உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிவமோகா பகுதியில் இருந்து இரண்டு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது பா.ஜ.க. நிர்வாகியான சாய் பிரசாத் என்பவருடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. எனவே இன்று சாய் பிரசாத்திடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.