வெலிங்டன்

நியூசிலாந்து ரெயிலில் இந்தியில் பேசிய இந்தியப் பயணியிடம் தகராறு செய்த உள்ளூர் பெண் ரெயில் நடத்துனரால் இறக்கி விடப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மெட்ரோ ரெயில் போல நியூசிலாந்தில் மெட்லின்க் என்னும் ரெயில் உள்ளது. இந்த ரெயிலில் ஜே  ஜே பிலிப்ஸ் என்பவர் நடத்துநராக பணிபுரிகிறார். வெலிங்டனிலிருந்து அப்பர் ஹட் என்னும் பகுதிக்கு இந்த ரெயில் சென்றுக் கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் இரைச்சல் அதிகமாக இருந்தது. அதையொட்டி பிலிப்ஸ் அங்கு சென்று விசாரித்துள்ளார்.

அங்கு ஒரு இந்தியரிடம் நியூசிலாந்தைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டிருந்துள்ளார். இது குறித்து பிலிப்ஸ் விசாரித்த போது அந்த இந்தியர் தனது நண்பருடன் மொபைல் மூலம் இந்தியில் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது அந்த பெண்ணுக்கு எரிச்சலை ஊட்டி உள்ளது. அவர் இந்தியரிடம் வந்து கூச்சலிட்டுள்ளார்.

அந்த பெண் அவரிடம் இந்தியில் பேச வேண்டும் என்றால் உங்கள் நாட்டுக்குப் போய் பேசுங்கள். இங்கு ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நாட்டை விட்டு ஓடுங்கள்” எனக் கத்தி உள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணை கண்டித்ததால் அங்கு பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது

பிலிப்ஸ் அந்த பெண்ணிடம் அவர் இவ்வாறு இன வெறியுடன் நடப்பது  தவறு எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவ்ர் பேச்சைக் கேளாமல் மேலும் கூச்சலிட்டுள்ளார். பிலிப்ஸ் ரெயிலை நிறுத்தச் சொல்லி அந்தப் பெண்ணை ரெயிலில் இருந்து இறக்கி விட்டுள்ளார். இந்த செய்தி சமூக வலைத் தளங்களில் பரவி வைரலாகியது. வெலிங்டன் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பிலிப்ஸை பாராட்டி உள்ளனர்.